இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்: சிறிசேனா வெற்றி முகம்; தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்ச !

Filed under: அரசியல்,உலகம் |

sirisena01இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனா முன்னிலை வகித்துள்ளார்; அதிபர் மகிந்த ராஜபக்ச தொல்வி முகம் கண்டுள்ளார். 

சற்று முன் வரை சிறிசேனா 30,33,122 (52.68%) வாக்குகள் பெற்று முன்னிலை. ராஜபக்ச 26,50,049 (46.02) வாக்குகள் பெற்று பின்னடைவு.

இன்று (வியாழக்கிழமை) காலை 6.30 மணி நிலவரப்படி, தேச அளவில் சிறிசேனா 14,06,557 (52.49%) வாக்குகளுடன் முன்னிலையிலும், ராஜபக்ச 12,38,340 (46.21%) வாக்குகளுடனும் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 

கொழும்பு, கம்பஹா, கண்டி, புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை, நுவரெலியா, பதுல்ல, யாழ்ப்பாணம், வன்னி, பொலநறுவ உள்ளிட்ட மாவட்டங்களில் மைத்ரிபால சிறிசேனா முன்னிலை வகித்திருந்தார். 

அதேவேளையில், காலி, மாத்தளை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், மொனராகலை, கேகாலை, ரத்தினபுரி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் ராஜபக்சவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. 

தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்ச 

இந்த நிலையில், அதிபர் ராஜபக்ச தனது தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய அதிபரிடம் ஒப்படைப்படைக்கப்படும் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. 

அதிகாலை பிரதான எதிர்கட்சித் தலைவர் ரணில் விகரமசிங்கவை சந்தித்த ராஜபக்ச தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறினார். 

தமிழர் பகுதிகளில் அதிக வாக்குப்பதிவு: 

இலங்கை அதிபர் தேர்தல் அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது. பெரும்பாலான பகுதிகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. நேற்று மாலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடந்து வருகிறது. 

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. வானிலை சீராக இருந்ததால், வாக்குப்பதிவு பாதிக்கப்படவில்லை. சுமார் ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்களில் 67 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளைப் பதிவு செய்னதர். 

தமிழர், முஸ்லிம் வாக்குகள்

“அனைத்துப் பகுதிகளிலும் அதிக அளவு வாக்குகள் பதிவானது. முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் வடமேற்கு மாகாணத்திலுள்ள புத்தளத் தில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே மொத்தமுள்ள 1,200 வாக்காளர்களில் 800 வாக்காளர்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இது மிகக் குறிப்பிடத்தக்க விஷயம்” என, சுதந்திரமான, நேர்மையான தேர்தல் இயக்க நிர்வாகி கீர்த்தி தென்னகூன் தெரிவித்துள்ளார். மசூதிகளில் உள்ள ஒலி பெருக்கி மூலம், வாக்குப்பதிவில் பங்கேற்க தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டது. 

இதனிடையே, புத்தளம் பகுதியில் இடம் பெயர் முஸ்லிம்கள் சுமார் 10,000 பேர் வாக்களிக்காத வகையில் தடுக்கப்பட்டதாக, முன்னாள் அமைச்சர் ரிசார் பதியுதீன் குற்றம்சாட்டியுள்ளார். 20 பஸ்களை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த போதும் ஆளும் கட்சிப் பிரமுகரின் தலையீட்டால், சுமார் 10,000 முஸ்லிம்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப் பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில், அதிக அளவு வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு மையம் திறந்தவுடனேயே நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித் தனர் என தமிழ் தேசியக் கூட்டணி எம்.பி. சரவணபவன் தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் 61.15 சதவீத வாக்குகளும், மாத்தறை – 76, அம்பாந்தோட்டை 70, நுவரேலியா 80, புத்தளம் 78, பொலனறுவ 75, கோலை 70, கம்பஹா 65, காலி 79 சதவீத வாக்குகள் பதிவாகின. 

மொத்தம் 19 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், ராஜபக்சவுக்கும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும் இடையேதான் கடும் போட்டி. 

தனது சொந்த தொகுதியான ஹம்பன் தோட்டையில் தனது வாக்கைப் பதிவு செய்த அதிபர் ராஜபக்ச கூறும்போது, “மீண்டும் நாங்கள் பெருவெற்றி பெறுவோம். அது உறுதி. நாளை முதல் எங்களின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்குவோம்” என்றார். 

வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: வாக்குப்பதிவு நேற்று மாலை 4.30 மணிக்கு முடிந்தவுடன் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. பின்னர் இரவு 8 மணிக்கு மேல் வாக்கு எண்ணும் பணி நடந்தது. முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இரவு 10 மணி முதல் அறிவிக்கப்பட்டன. 

கையெறி குண்டு வீச்சு: 

முன்னதாக வவுனியா பகுதியில் நெலுக்குளம் கலைமகள் மகாவித்யாலா பள்ளியில் வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இப்பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் மதியம் 2.25 மணிக்கு கையெறி குண்டு வீசப்பட்டது. இதில் எவ்வித சேதமுமில்லை. இக்குண்டை யார் வீசியது என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை அல்வாய் லங்கா வித்யாலத்தில் உள்ள வாக்குப் பதிவு மையம் அருகே கையெறி குண்டு வீசப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை. காங்கேசன் துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

அதிபர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு: 

அதிபர் ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு வழக்கத்தை விட கூடுதலாக 800 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேற்கு மாகாண காவல்துறை டிஐஜி அனுரா சேனாநாயகவின் உத்தரவையடுத்து அதிபர் மாளிகைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

விருப்ப வாக்கு முறை: 

இலங்கை அதிபர் தேர்தல் விருப்ப வாக்கு முறையில் நடைபெறு கிறது. வாக்காளர்கள் அதிகபட்சம் மூவருக்குத் தமது விருப்ப வாக்குகளை அளிக்கலாம். 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். முதற்கட்ட வாக்கெடுப்பில் யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்கவில்லை என்றால், அதிக வாக்குகள் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்குத் தெரிவு செய்யப்படுவார்கள். 

இதில் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளில் 2-ம் விருப்பத் தெரிவாக போட்டியில் நிற்கும் வேட்பாளருக்குரிய வாக்குகள் கணக்கிடப்பட்டு அவர்களின் முதலாம் கட்ட எண்ணிக்கையுடன் கூட்டப்பட்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இதன் பின்னரும் யாரும் 50 சதவீத வாக்குகள் பெறாவிட்டால் 3-ம் விருப்ப வாக்கு கணக்கிடப்படும். இறுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் அதிபராவார்.