‘சென்னை 28’ படம் வெளியாகி 10 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது !

Filed under: சினிமா |
ஜாதி, மதம், மொழி போன்றவைகளால் நம் இந்தியா வேறுபட்டு இருந்தாலும், கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டால் ஒன்றுபட்டு தான்  இருக்கின்றது என்பதை நம் அனைவருக்கும் மிக ஆழமாக  உணர்த்திய திரைப்படம் – 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘சென்னை 28’. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படத்தின் ‘பௌலிங்கா பீல்டிங்கா?’, ‘பாட்டி போட்டோ உடைஞ்சு போச்சுடா, என்ன கொடுமை சார்” ஆகிய வசனங்களை   இன்றளவும் இளைஞர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி கொண்டு தான் இருக்கின்றார்கள். யுவன்ஷங்கர் ராஜாவின் துள்ளலான இசையில் உருவான ‘சரோஜா சாமானிக்காலோ’ பாடல், இளம் ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளையும், வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
“எங்கள் முதல் ஆட்டம் தொடங்கி பத்து வருடங்கள் நிறைவு பெற்ற உள்ள இந்த நிலையில், எங்களின் இரண்டாம் ஆட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது, எங்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.  எனக்கு, ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், விஜய் வசந்த், அஜய் ராஜ் மற்றும் ஒட்டுமொத்த குழுவினரின் வாழ்க்கை திசையையும்  மாற்றியது எங்களின்   ‘சென்னை 28’ திரைப்படம் தான்.  யுவன் ஷங்கர் ராஜாவின் இசை தான் எங்கள் வெற்றிக்கு  முகவுரை எழுதியது. பிரேம்ஜியின் பிண்ணனி இசை கதையுடன் இரண்டற கலந்து ஜொலித்தது. கே எல் பிரவீனுடைய பட தொகுப்பும், சக்தி சரவணனின் ஒளிப்பதிவும் படத்தின் வெற்றியை உறுதி செய்தது. தயாரிப்பாளர் எஸ் பி சரண் எங்களுக்கு ஒரு தூண் போல இருந்து பலம் சேர்த்தது மறக்க முடியாதது.இந்நாள் வரை எங்களின் வெற்றிக்கு  உறுதுணையாய் இருந்து வரும்  ரசிகர்கள், பொதுவான சினிமா ரசிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் ஆகியோருக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். ஆண்டுகள் பல கடந்து இருந்தாலும், எங்களின் புத்துணர்ச்சியும், ஆற்றலும், எங்களை மேலும் மேலும் இளமையாக வைத்திருக்கின்றது” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் வெங்கட் பிரபு.⁠⁠⁠⁠