அண்ணாமலையின் ஆவேசம்..!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டில்லி நிர்வாக மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் தலைநகர் டில்லியை ஒரு மாநகராட்சி போல தரம் குறைக்கும் இந்த மசோதாவை நிறைவேற்றிய நாள் மக்களாட்சியின் கருப்பு நாள் என விமர்சனம் செய்திருந்தார்.

இந்த விமர்சனத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடியில், தலைநகர் டில்லியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த நடைமுறைக்கு மாறாக டெல்லி நிர்வாக மசோதா எவ்வாறு வேறுபட்டு இருக்கிறது என்பதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். நமது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதை நேற்று பாராளுமன்றத்திலும் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மாநில அரசுகளை, அரசியலமைப்பு சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி 90 முறை டிஸ்மிஸ் செய்தார்களே, அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள். முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் மட்டும் 50 முறை மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தாரே அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள். 1975ஆம் ஆண்டு, நாட்டில் எமர்ஜென்சி அறிவித்து ஜனநாயகத்தைப் படு குழியில் தள்ளிய இந்திரா காந்திக்கு, 1980ல் `நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என உங்களது தந்தை தமிழகத்தில் சிவப்புக் கம்பளம் விரித்தாரே அதுதான் ஜனநாயகத்தின் கறுப்பு நாள். டில்லி ஒரு யூனியன் பிரதேசம், இது வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது என்பதை மாநில உரிமைகளுடன் குழப்பிக் கொள்ளும் தமிழக முதலமைச்சருக்கு யாராவது எடுத்து சொல்ல வேண்டும். மத்திய பாஜக அரசு கொண்டுவரும் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவிப்பதை, பல ஆண்டுகளாக தமிழக மக்களின் உரிமைகளை அடகு வைத்து, காங்கிரஸ் கட்சியின் உற்ற அடிமையாக இருக்கும் கொத்தடிமைக் கூட்டமான திமுக விமர்சிப்பது வெட்கக்கேடானது” என்று கூறியுள்ளார்.