“இந்தி படத்தையாவது விட்டுவிடலாம்!”

Filed under: சினிமா |

இந்த ஆண்டு தொடர்ச்சியாக முன்னணி கலைஞர்களின் படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்.

அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள “லால் சிங் சத்தா” திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமீர்கான் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப்பின் இத்திரைப்படம் ரிலீஸ் ஆவதால் இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இவ்வாண்டு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக படங்களை வெளியிட்டு வருகிறது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம். இது விமர்சனங்களை எழுப்பினாலும், தொடர்ந்து பட நிறுவனங்களும் ரெட் ஜெயண்ட் மூலமாக படத்தை ரிலீஸ் செய்யவே விரும்புகின்றனர்.

பாலிவுட் படமான “லால் சிங் சத்தா” படத்தை வெளியிடுவது பற்றி உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, “தொடர்ந்து படங்களை வெளியிட்டு வருவதால் ஒரு சிறிய இடைவெளி எடுக்கலாம் என்று இருந்தோம். ஆனால் அமீர்கான் சாரே நேரில் அழைத்து பேசியதால் என்னால் மறுக்கமுடியவில்லை. இந்தி படத்தையாவது விட்டு வைக்கலாம் என இருந்தேன். ஆனால் அது முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.