கச்சத்தீவு மேல அவ்ளோ அக்கறை? மோடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!

Filed under: அரசியல்,தமிழகம் |

பிரதமர் மோடி மற்றும் பாஜக பிரபலங்கள் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருகின்றனர்.

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டது குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்று வெளியிட்டார். அதை தொடர்ந்து பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என பலரும், கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது குறித்து காங்கிரஸ் & திமுகவை விமர்சித்து வருகின்றனர். மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், “கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது, தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாக்க திமுக எதுவும் செய்யவில்லை” என்று பதிவிட்டுள்ளார். கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக திடீர் பாச நாடகம் போடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான். 1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்? 2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்? 3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா? திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே…” என பதிவிட்டுள்ளார்.