சிவகாசி: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறதா? என்பதை பா.ஜ.க. தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
பா.ம.க. தலைவரும் தருமபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”கடந்த ஆண்டு தமிழகத்தில் மதுவிற்பனையின் மூலம் அரசுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், தமிழக அரசு கடைகளை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் பெருகிவிட்டன. தினசரி கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன.
தமிழக மீனவர்களை இலங்கை அதிகாரிகள் தாக்கினால், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டார்கள் என்கின்றனர். ஆனால், குஜராத்தில் மீனவர்கள் தாக்கப்பட்டால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டனர் எனக் கூறுகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? மீனவர்கள் பிரச்னை தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் நேரில் சந்தித்துப் பேசியுள்ளேன்.
இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் செய்ததையே பா.ஜ.க. அரசும் செய்கிறது. ஐக்கிய நாடுகள் குழுவுக்கு இந்தியா விசா மறுத்தது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் அமைக்கப்பட்ட பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறதா? என்பதை பா.ஜ.க. தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.