மகனையே வெட்டிக் கொன்ற தந்தை!

Filed under: தமிழகம் |

வேறு சமூக பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் தன் சொந்த மகனை தந்தையே துள்ளத் துடிக்க கொன்ற சம்பவம் கிருஷ்ணகிரி அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையிலுள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி மனைவி சுந்தரி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 25 வயதான மகன் சுபாஷ் தனது பாட்டி கண்ணம்மாள் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளனர். தனது காதலி வேறு சமூகம் என்பதால் தனது தந்தை தண்டபானி காதலை ஏற்கமாட்டார் என சுபாஷ் தனது பெற்றோருக்கு தெரியாமலே அனுசுயாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் இருவரும் தனது பாட்டி கண்ணம்மாள் வீட்டுக்கு அருகிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளனர். தனது மகன் சுபாஷ் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதையறிந்த தண்டபாணி ஆத்திரமடைந்துள்ளார். விடியற்காலை நேரமே அரிவாளோடு சென்ற அவர் கண்ணாம்மாள் பாட்டி வீட்டில் இருந்த சுபாஷை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார். அதை தடுக்க வந்த கண்ணம்மாள் பாட்டியையும் வெட்டிக் கொன்றுள்ளார். ஆனாலும் ஆத்திரம் தீராமல் சுபாஷின் மனைவி அனுசுயாவை தேடிச் சென்று அவரை சாலை அருகே வைத்து சரமாரியாக வெட்டிவிட்டு ஓடியுள்ளார். இந்த கோர சம்பவத்தில் சுபாஷும், கண்ணம்மாள் பாட்டியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அனுசுயா வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தண்டபாணியை போலீசார் தேடி வந்தனர். ஊத்தங்கரை எல்லையில் தென்பெண்ணை ஆற்று அருகே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற தண்டபாணியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார். வேறு சமூக பெண்ணை காதலித்து திருமணம் செய்ததற்காக சொந்த மகன், தாய், மருமகளை வெட்டிக் கொன்ற தண்டபாணியின் செயல் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.