ராமதாஸின் நம்பிக்கை!

Filed under: அரசியல் |

பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சர் கட்டாயம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டுமென பலதரப்பிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழுவை திமுக அரசு ஏற்படுத்தியது. இந்த குழு வல்லுனர்களிடம் பரிந்துரை பெறுதல், மக்கள் கருத்துகளை கேட்டறிதல் ஆகியவற்றை மேற்கொண்டு இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தது. ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் நடவடிக்கை குறித்து டுவிட்டரில் பாமக நிறுவனர் ராமதாஸ் “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இக்கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன், எடுக்கப்படும் என்று நம்புகிறேன். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் விஷயத்தில் வல்லுனர் குழு அமைந்து பரிந்துரை பெறுதல், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு, சூதாட்ட நிறுவனங்களுடன் கலந்தாய்வு என தேவைக்கும் அதிகமாகவே தமிழ்நாடு அரசு முன்தேவை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது! அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆன்லைன் சூதாட்டத் தடையாகத்தான் இருக்க வேண்டும். எனவே, அமைச்சரவையில் ஒப்புதல் அளித்து ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு உடனே முடிவுரை எழுதப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.