“அக்னிபாத்” திட்டத்தால் பற்றியெறியும் வட மாநிலங்கள்!

Filed under: இந்தியா |

குறுகிய ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் சேவை செய்ய “அக்னிபாத்” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டள்ளது.

இந்திய ராணுவத்தில் ஆண்டுதோறும் முப்படைகளான ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் பணிபுரிய தீரமிக்க வீரர்கள், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ராணுவத்திற்கு பொதுவாகவே பணிபுரிய செல்பவர்கள் குறுகிய காலமாக 10 ஆண்டுகளும், நிரந்தர அடிப்படையில் ஓய்வு பெறும் வரையிலும் பணிபுரியலாம் என்ற நடைமுறை தான் உள்ளது. ராணுவத்தில் அதிகளவில் இளைஞர்களின் பங்களிப்பை ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசு “அக்னிபாத்” என்ற குறுகிய கால 4 ஆண்டுகள் ராணுவ சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலமாக 45 ஆயிரம் இளைஞர்கள் ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர இளைஞர்கள், பெண்கள் 18வயது முதல் 21 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். வழக்கமான ராணுவ உடற்தகுதி நிர்ணயங்களே அக்னிபாத் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் வீரர்களுக்கு முதல் ஆண்டில் ரூ.4.76 லட்சம் ஆண்டு ஊதியமும், 4வது ஆண்டில் 6.92 லட்சம் ஆண்டு ஊதியமும் வழங்கப்படும். 4 ஆண்டுகளை முழுவதுமாக முடிக்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சேவை நிதியாக தலா ரூ.11.7 லட்சம் வழங்கப்படும். அக்னிபாத் திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் உடற்தகுதி தேர்விற்கு பிறகு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்படுவர். 4 ஆண்டுகாலம் பணி முடிந்ததும் அதில் சிறப்பாக செயலாற்றிய 25 சதவீதம் பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வட மாநிலங்களில் இளைஞர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட மாநிலங்களான பீகார், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் ராணுவ பணியில் சேருவதை அடிப்படையாக கொண்டே பள்ளி பாடங்கள் முதல் பயிற்சி வரை மேற்கொண்டு வருகின்றனர். தங்களின் 12ம் வகுப்பு முடித்ததுமே ராணுவத்தில் சேர தகுதி பெறுவதற்கான உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அப்படியிருக்கும் பட்சத்தில், அனைத்து உடற்தகுதிகளோடும் ராணுவத்தில் இணைந்த பிறகு 4 ஆண்டுகள் மட்டுமே பணி காலம் என்பது ஏற்க முடியாததாக உள்ளதாகவும், 4 ஆண்டுகள் ராணுவத்தில் இருந்து ஊர் திரும்பியவுடன் என்ன செய்யவது என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இத்திட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என உத்தர பிரதேசம், பீகார், ஹரியானா என பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பீகார் ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் 3 ரயில்களுக்கு தீ வைத்துள்ளனர். தற்போது இந்த போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் தேசிய அளவில் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. மத்திய அரசு இதுகுறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.