அனைவரையும் பெருமைபடுத்துவேன் – சூர்யா டுவீட்!

Filed under: சினிமா |

உலகப்புகழ்பெற்ற மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அகாடமியில் சேர்வதற்காக நடிகர் சூர்யாவுக்கும் பாலிவுட் நடிகை கஜோலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் புகழ்பெற்ற, ஆஸ்கர் விருதை பெற இந்திய சினிமா பல வகைகளில் முயற்சி செய்து வருகிறது. கடந்த ஆண்டு சூர்யாவின் “சூரரை போற்று” ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்டது. பரிந்துரைக்கு முன்னாள் இறுதி செய்யப்பட்ட 366 படங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய படமாக சூரரை போற்று இருந்து, பின் வெளியேறியது. அதுபோல சூர்யாவின் “ஜெய்பீம்“ திரைப்படமும் ஆஸ்கர் கமிட்டியின் யுடியூப் பக்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவுக்கு 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது. ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

397 பேரில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோலின் பெயரும் இடம்பெற்றுள்ளது. புகழ்பெற்ற மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அகாடமியில் சேர நடிகர் சூர்யாவுக்கும் பாலிவுட் நடிகை கஜோலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கவுரவத்தைப் பெற்ற நடிகர் சூர்யாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவ்வழைப்புக் குறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டரில், “ஆஸ்கர் கமிட்டியின் அழைப்பை பணிவோடு ஏற்கிறேன். எனக்காக வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவரையும் பெருமைப்பட வைப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.