அமைச்சர் அன்பில் மகேஷ் “எனது அம்மா கண்டிப்புடன் வளர்த்ததால், தான் இன்றும் நான் வீட்டிற்கு நுழைந்தவுடன் கை கால்களை கழுவி விட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பேன். அதைப்போல, சுகாதாரம் குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொடுக்க வேண்டும்”என காணொளி வாயிலாக மாணவர்களிடம் பேசினார்.
இன்று மதுரை பாரபத்தி கிராமத்தில் ரோட்டரி பவுண்டேஷன் சார்பாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள 20 அரசு பள்ளிகளில் அறம் சுகாதார மையம் திறக்கும் விழா நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு, சுகாதார மையங்களை திறந்து வைத்தார். இதில், அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். காணொளி வாயிலாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் “நான், நேரடியாக கலந்து கொள்ளாமல் என்னுடைய அலுவலகத்தில் இருந்து பங்கேற்கும் முதல் நிகழ்வு இது என்று நினைக்கிறேன். எனது அம்மா கண்டிப்புடன் வளர்த்ததால் தான் இன்றும் நான் வீட்டிற்கு நுழைந்தவுடன் கை கால்களை கழுவி விட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பேன். அதைப்போல, சுகாதாரம் குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொடுக்க வேண்டும். நாம் படிக்கும் பள்ளிக்கு நாம் பதிலுக்கு ஏதாவது செய்வதற்காக நல்ல இடத்திற்கு வர வேண்டும் அதற்குப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.