அமைச்சர் உதயநிதி நீட் ஒழிக்கும் போராட்டத்திற்கு அழைப்பு

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் நம் மாணவர்கள் பெற்றோர்களின் உயிரை காக்கவும் இந்த உண்ணாவிரத அறப்போரில் திரளாக பங்கேற்போம். நீட்டை ஒழிப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் பலவும் நீட் தேர்வுக்கு எதிராக போராடி வருகின்றது. மத்திய பாஜக அரசு நீட் தேர்வு நடத்துவதில் உறுதியாக உள்ளது. நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக வரும் ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசையும், தமிழக ஆளுநரையும் கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படவுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில், “நீட் தேர்வு, தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவை சிதைத்து, அவர்களை மட்டுமன்றி அவர்தம் பெற்றோரையும் மரணத்தை நோக்கி தள்ளுகிறது. எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் எனக்கென்ன என்றிருக்கும் ஒன்றிய அரசையும் -ஆளுநரையும் கண்டித்து, கழகத்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, திமுக இளைஞரணி, திமுக மாணவரணி, திமுக மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 20ம் தேதியன்று மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம். தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் – நம் மாணவர்கள் -பெற்றோர்களின் உயிரை காக்கவும் இந்த உண்ணாவிரத அறப்போரில் திரளாக பங்கேற்போம். நீட்டை ஒழிப்போம்’’ என்று பதிவிட்டுள்ளார்.