இந்திய டாக்டரை கௌரவித்த அபுதாபி!

Filed under: இந்தியா,உலகம் |

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவரின் பெயர் மருத்துவ பணியில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் விதமாக அபுதாபியில் உள்ள ஒரு சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

கேரளாவில் பிறந்த ஜார்ஜ் மேத்யூ, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். இவருக்கு திருமணமாகி வல்சா என்ற மனைவியும், மர்யம் என்ற மகளும் உள்ளனர். கடந்த 1967-ம் ஆண்டு டாக்டர் மேத்யூ குடும்பத்துடன் அமீரகத்தில் உள்ள அல் அய்ன் பகுதியில் குடியேறினார். அதன்பின், அங்குள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதல் இந்திய டாக்டர் என்ற பெயரையும் பெற்றார். இதைத் தொடர்ந்து, அமீரகத்தில் மருத்துவத் துறையில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றிய அவர் கடந்த 1972-வது ஆண்டில் அல் அய்ன் பகுதியின் மருத்துவ இயக்குநராகப் பணியாற்றினார். மருத்துவ பணியில் இவர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் விதமாக கடந்த 2004-ம் ஆண்டு இவரது குடும்பத்துக்கு அமீரக அரசு குடியுரிமை வழங்கியது. இதையடுத்து, அபுதாபி விருதை கடந்த 2018-ம் ஆண்டு பெற்றார். இந்நிலையில், அமீரகத்துக்கு டாக்டர் மேத்யூ அளித்த பங்களிப்பை நினைவு கூறும் வகையில் அபுதாபி மாநகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் அல் மப்ரக் பகுதியில் ஷேக் ஷேக்கபுத் மருத்துவ நகரம் அருகில் உள்ள சாலைக்கு டாக்டர் ஜார்ஜ் மேத்யூ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.