உதயநிதிக்கு ஆதரவாக முதலமைச்சர் அறிக்கை!

Filed under: அரசியல்,தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்த விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துகள் தேசியளவில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளன. தொடர்ந்து உதயநிதிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் பேசி வருகின்றனர். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதிக்கு ஆதரவாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “சனாதனக் கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்றுதான் அமைச்சர் உதயநிதி பேசினாரே தவிர எந்த மதத்தையும் மத நம்பிக்கையையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை. அமைச்சர் உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் ஒன்றிய பிரதமர் பேசுவதா? பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வையும் பெண்ணடிமைத்தனத்தையும் நியாயப்படுத்தும் பழமைவாத வர்ணாஸ்ரம சிந்தனைகளுக்கு எதிராக, இந்திய துணைக்கண்டத்தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஜோதிபா பூலே, நாராயணகுரு, வள்ளலார், வைகுண்டர் என பல பெரியோர்கள் குரல் கொடுத்து வந்துள்ளனர். நிலவுக்குச் சந்திராயன் விடும் இந்தக் காலத்திலும் சாதி வேற்றுமைகள் கற்பித்தும், வர்ணாசிரமக் கருத்துகளைச் சொல்லி பாகுபாடுகளை வலியுறுத்தியும், இந்தப் பிளவுபடுத்தும் எண்ணங்களுக்கு ஆதரவாக சாஸ்திரங்களையும், சில பழைய நூல்களையும் மேற்கோள் காட்டியும் சிலர் பிரச்சாரம் செய்து வரத்தான் செய்கிறார்கள், நானே குழந்தைத் திருமணம் செய்து கொண்டவன்தான்’ அந்த எண்ணங்களை நியாயப்படுத்தி, குழந்தைத் திருமணத்தை ஆதரித்து மாநிலத்தின் ஆளுநரே பேசுகிறார், குழந்தைத் திருமணம் செய்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால், அதற்கும் தடை போடுகிறார். இனப்படுகொலை என்ற சொல்லை தமிழிலோ, ஆங்கிலத்திலோ அமைச்சர் உதயநிதி எந்த இடத்திலும் சொல்லவில்லை, ஆனால் அப்படிச் சொன்னதாக பரப்பினார்கள். பொய்யர்கள்தான் இதனை பரப்புகிறார்கள் என்றால், பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் ஒன்றிய அமைச்சர்கள், பா.ஜ.க. முதலமைச்சர்கள் உண்மையில் அமைச்சர் உதயநிதி என்ன பேசினார் என்பதைத் தெரிந்து கருத்து சொல்லி இருக்க வேண்டும். மாறாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் அதே பொய்ச் செய்தியையே பரப்பியுள்ளார்கள். அமைச்சரின் தலைக்கு விலை என்று சொன்ன சாமியார் மீது உத்தர பிரதேச அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?” என்று கூறியுள்ளார்.