எண்ணெய் டேங்கர் லாரியில் தீ பற்றி காவல்துறை விளக்கம்!

Filed under: இந்தியா |

எண்ணெய் டேங்கர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர். லாரியின் டயர் வெடித்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் டிவைடரில் மோதி, பக்கவாட்டில் கவிழ்ந்து தீப்பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கன்னாவில் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட விபத்தில் எண்ணெய் டேங்கர் லாரி தீப்பிடித்தது. இவ்விபத்தில் டேங்கர் லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. ஆனால் லாரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.
தீ விபத்து குறித்து பேசிய கன்னா துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் சர்மா, ஜலந்தரில் இருந்து மண்டி கோபிந்த்கர் என்ற இடத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு எண்ணெய் டேங்கர் சென்று கொண்டிருந்ததாக தெரிவித்தார். கன்னா பஸ் ஸ்டாண்ட் மேம்பாலத்தை வந்தடைந்தபோது, ​​அதன் டயர் வெடித்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, டிவைடரில் மோதி, பக்கவாட்டில் கவிழ்ந்து தீப்பிடித்தது என்று அதிகாரி கூறினார். தீ விபத்து நடந்த மேம்பாலத்தின் சேதத்தை கண்டறிய சாலைப் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்றும் இச்சம்பவம் குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் சர்மா குறிப்பிட்டார்.