கத்தி முனையில் பட்டதாரி வாலிபர் கடத்தல்!

Filed under: தமிழகம் |

மர்ம நபர்கள் கத்தி முனையில் வாலிபர் ஒருவரை கடத்தி சென்ற சம்பவம் திருத்தணி அருகே உள்ள மக்களிடம் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா நத்தம் கிராமத்தில் முதுநிலை பட்டதாரி வாலிபர் வெங்கட முணி என்பவர் விவசாய வேலை செய்து வந்துள்ளார். திடீரென்று அந்த கிராமத்திற்கு சொகுசு காரில் பட்டாக்கத்திகளுடன் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், வெங்கட முனியை கத்தி முனையில் கடத்தி சென்றனர். தடுக்கச் சென்ற அவரது உறவினர்கள், நண்பர்களை வெட்டி விடுவதாக மர்ம கும்பல் மிரட்டி விட்டு சென்றுள்ளது. தகவலறிந்து வந்த திருத்தணி போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் வாலிபரை கடத்திச் சென்றது யார் என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் பிட்காயின் மற்றும் ஐஎஃப்எஸ் என்ற நிதி நிறுவனம் முதலீடுகள் சம்பந்தமான தொடர்பில் வாலிபர் வெங்கட முணி தொடர்பில் இருப்பதால் இப்பிரச்சினையின் காரணமாக அவரை கடத்தி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் வாலிபரை கடத்திய மர்ம நபர்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பட்டப்பகலில் கத்தி முனையில் வாலிபரை கடத்திய சம்பவம் அந்த கிராமத்தில் பொதுமக்களை பீதி அடைய செய்துள்ளது.