கள்ளக்குறிச்சி விஷசாராயம் குறித்து தங்கர்பச்சான் கேள்வி?

Filed under: அரசியல்,சினிமா |

தற்போது கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து நடிகர், இயக்குனர் தங்கர்பச்சான், “மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இங்கே இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர், “கருணையிலா ஆட்சிக்கடிது ஒழிக! வள்ளலார் இராமலிங்க அடிகளார் மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இங்கே இல்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் இன்று கள்ளச்சாராயத்தால் பறிபோன நாற்பது உயிர்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் நாம் தமிழ்நாடு அரசு விற்கும் கொடிய மதுவினால் ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் இம்மக்கள் செத்து மடிவது குறித்து பேச மறுக்கின்றோம்! நிர்வாகத்திறனின்றி ஆட்சி செய்து மக்களின் உயிர்பற்றி அக்கறைக் கொள்ளாமல் மடிய காரணமாக இருந்துவிட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்தே இழப்பீடு தரும் கொடுமைகளை எல்லாம் இன்னும் எத்தனைக் காலத்துக்குத்தான் சகித்துக் கொள்வது? தாலியை இழந்து நிற்கும் இந்தக் குடும்பங்களின் பெண்களுக்கு இனி துணை யார்? தந்தையை இழந்து நிற்கும் இந்த பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு இனி பொறுப்பு ஏற்கப் போவது யார்? உழைக்கும் மக்களின் உடலில் உள்ள பலத்தை அழித்து மனித வளத்தை அழித்தொழித்து, அனைத்துக் குற்றங்களுக்கும் ஊற்றுக்கண்ணாக விளங்கும் மதுவை விற்காமல் இனியாவது ஆட்சி செய்யப் பாருங்கள். இப்படிப்பட்ட இழப்புகள் உங்கள் இல்லத்தில் ஏற்பட்டிருந்தால் தெரியும் அது என்ன மாதிரியான வலி என்பது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.