கள்ளச்சாராய மரணம்! அதிமுக வெளிநடப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் நிச்சயமாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இன்று தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் அப்பாவு கேள்வி நேரத்துக்குப் பின் விவாதிக்கலாம் எனத் தெரிவிக்க அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்ற தங்களின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை. அதனால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். கள்ளச் சாராய மரணங்கள் அதிகரிக்க பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்கு தாமதமாக வந்ததே காரணம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் கூறியது பச்சைப் போய். கள்ளச்சாராயத்தால் மரணங்கள் ஏற்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் தவறான தகவல் அளித்தார். தங்களுக்கு கிடைத்த தகவலின்படி 183 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதால், 55 பேர் பலியாகி உள்ளனர். மாவட்ட ஆட்சியர் உண்மையைச் சொல்லியிருந்தால் இத்தனை உயிர்கள் பறிபோயிருக்காது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை வலையில் திமுக கவுன்சிலர்களுக்கு தொடர்பு இருக்கிறது. அதனால் அரசு அமைக்கும் விசாரணை ஆணையத்தால் உண்மை வெளிவராது. மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் நிச்சயமாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். சிபிஐ விசாரணை கோரி, அதிமுக நீதிமன்றத்தை நாடி உள்ளோம். இவ்வழக்கில் நீதிபதிகள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என எடப்பாடி தெரிவித்தார்.