குடிமகன் செய்த அலப்பறைகள்!

Filed under: அரசியல்,தமிழகம் |

நாளை கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கல்லூரியில் நடைபெற உள்ள கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கல்லூரி நுழைவாயிலில் அரசியல் பிரமுகர்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சிவகங்கை அருகே உள்ள பில்லூரை சேர்ந்த பாக்கியராஜ் மது போதையில் கல்லை தூக்கி எரிந்து பிளக்ஸ் பேனரை கிழித்தார். மேலும் அதனை அகற்ற முயன்ற போது பின்புறமாக கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு சுயநினைவினை இழந்து கீழே விழுந்து கிடந்தார். இதை கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்தான சிசி டிவி காட்சிகள் வெளியாகி நிலையில், மருத்துவமனையில் செய்தி சேகரிக்கச் செய்தியாளர் சென்ற போது, சிகிச்சையளித்த மருத்துவரை பாக்கியராஜ் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை படம் பிடித்த செய்தியாளரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் மிரட்டல் விடுத்ததால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தின் போது மருத்துவமனையில் ஒரு காவலர் மட்டுமே பணியில் இருந்ததால் போதை ஆசாமியை சமாளிக்க முடியாமல் பொதுமக்களும் களத்தில் இறங்கி போதை ஆசாமியை சமரசப்படுத்தினார் எனவே மருத்துவமனையில் கூடுதல் காவலர்களை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சையளித்த மருத்துவரையும், செய்தியாளரையும் போதை ஆசாமி மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை முழுவதும் சாலைகளில் மது பிரியர்கள் மதுவை அருந்திவிட்டு ஆங்காங்கே படுத்து கிடக்கும் சம்பவம் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்துகிறது.