குரூப்-4 முறைகேடு?; அண்ணாமலை!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியான குரூப் 4 தேர்வு முடிவுகளில் ஓரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பலர் தேர்ச்சி பெற்றுள்ளதில் முறைகேடு நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி, அரசுத்துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்சர் உள்ளிட்ட 11 வகைப் பணிகளுக்கு 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, கடந்தாண்டு ஜூலை மாதம் 24ம் தேதி தமிழகம் முழுவதிலும் குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வில் 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். 24ம் தேதி இந்த குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதில், ஒரே பயிற்சி மையத்திலிருந்து சுமார் 2000 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன் சமூகவலைதளப் பக்கத்தில், “தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது. அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும். உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும். அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.