கூட்டணிக்கு நிபந்தனை விதித்த பிரேமலதா!

Filed under: அரசியல்,தமிழகம் |

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி மாவட்டச் செயலாளருடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம், “தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை யாரிடமும் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. 14 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம். 2014 மக்களவைத் தேர்தல் போல் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் பங்கீடு செய்யும் கட்சியுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டுள்ளோம். பிப்ரவரி 12ம் தேதிக்குள் தேமுதிகவின் கூட்டணியின் நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வேட்பாளர்கள், போட்டியிடும் தொகுதிகள் குறித்து விரைவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். நான்கு மண்டலங்களில் தேமுதிக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் நாளை முதல் தேர்தல் பணி தொடங்கவிருக்கிறோம். புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார். 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் என்ற அதிரடி நிபந்தனையை தேமுதிக விதித்துள்ளது. இதனால் கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிக்க வாய்ப்புள்ளது. தேமுதிகவின் நிலைப்பாட்டால் அதிமுகவும், பாஜகவும் அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.