கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு!

Filed under: அரசியல்,இந்தியா |

ஏப்ரல் 23ம் தேதி வரை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை நீட்டித்து டில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டில்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் இருந்தார். இது தொடர்பாக அவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டில்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடைவடைந்ததையடுத்து, காணொலி காட்சி மூலம் டில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வருகிற 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, டில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை ஏப்ரல் 24ம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தது.