கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்!

Filed under: அரசியல்,இந்தியா |

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். உச்சநீதிமன்றம் வரும் ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையிலடைக்கப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறை கைது செய்தது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் தேர்தலை கணக்கில் கொண்டு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை சார்பில் பிரமாணப் பத்திரம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இடைக்கால ஜாமின் வழங்கப்பட வேண்டுமானால், எந்த அரசியல்வாதியையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்க முடியாது என தெரிவித்துள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஜூன் 1-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.