சந்திரபாபு நாயுடுவுக்கு ஸ்டாலின் வாழ்த்து!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த மே 13ம் தேதி ஆந்திர மாநில சட்டமன்றத்தின் 175 தொகுதிகளுக்கும் மக்களவைப் பொதுத் தேர்தலோடு சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார். இதில் தெலுங்கு தேசம் கூட்டணி 140-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையானதை விடவும் அதிக இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகித்து வெற்றி முகத்தில் உள்ளது. இதன் மூலம் சந்திரபாபு நாயுடு 4வது முறையாக மீண்டும் ஆந்திர மாநில முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதன்படி ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “உங்கள் தலைமை ஆந்திர பிரதேசத்திற்கு செழிப்பையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரட்டும், அதன் மக்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் நிறைவேற்றட்டும்” என்று பதவிட்டுள்ளார்.