செல்லூர் ராஜூவின் கேள்வி!

Filed under: அரசியல்,தமிழகம் |

செல்லூர் ராஜு நேற்று பிரதமர் மோடி நெல்லையில் பேசிய போது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை மட்டும் புகழ்ந்த நிலையில் எடப்பாடியாரை ஏன் புகழவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்த போது பல்லடம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். நேற்று நெல்லையில் பிரதமர் மோடி பேசிய போது அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்தார். இருவரும் தமிழக நன்மைக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தனர். தமிழக மக்களுக்கு பல திட்டங்களை கொடுத்தார்கள் என்றும் கூறினார். ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவையடுத்து அதிமுகவில் இருந்து முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதுகுறித்து பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு “புரட்சித்தலைவரையும் அம்மாவையும் பாராட்டி பேசிய பிரதமர் மோடிக்கு நன்றி, ஆனால் எங்கள் பொது செயலாளர் எடப்பாடியாரை அவர் ஏன் பாராட்டவில்லை, ஏனென்றால் தேர்தலில் மனதை வைத்தே பிரதமர் மோடி பேசி உள்ளார்” என்று கூறியுள்ளார்.