டிக்கெட்டின்றி பயணம் செய்தவர்களிடமிருந்து அபராதம் வசூல்!

Filed under: தமிழகம் |

பேருந்துகளில் டிக்கெட்டின்றி பயணித்த 4,223 பயணிகளிடமிருந்து அபராதத் தொகை ரூ.4,71,600- வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், உரிய பயணச்சீட்டு மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்பட்டுள்ள பயண அட்டை இல்லாமல் பயணம் செய்வது, மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் 178(B) பிரிவின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இதனை வலியுறுத்தி, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட அவ்வப்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாநகர் போக்குவரத்துக் கழகப் பயணச்சீட்டு பரிசோதகர்களைக் கொண்டு. மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்புப் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்பரிசோதனையின் போது பயணச்சீட்டு இன்றி பயணிப்போரிடம் அபராதத் தொகை அதிகபட்சமாக ரூ.500 வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தோர் கடந்த ஜனவரி மாதத்தில் 4,223 நபர்களிடம் அபராத தொகையாக ரூ.4,71,600- வசூலிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.