டிசி கொடுக்க ஒன்றரை லட்சமா?

Filed under: தமிழகம் |

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் சான்றிதழ் வழங்க ரூ.1.5லட்சம் கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் எம்ஏஎம் மெட்ரிக் மற்றும் சீனியர் செகண்டரி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இரு மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ்களை தர மறுத்து வருவதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் பக்ருதீன் & ஃபகமிதா தம்பதியினரின் மகன்கள் பஹிம் பாக்கர்(16), பாரிஸ் பாக்கர்(14) கடந்த 2018ம் ஆண்டு முதல் சிறுகனூரில் உள்ள எம்ஏஎம் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி விடுதியில் தங்கி படித்துள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக பக்ருதீன் கொடைக்கானலுக்கு இடம் பெயர்ந்ததால் மகன்களின் மாற்று சான்றிதழை வழங்கும்படி பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் மாற்று சான்றிதழை தர மறுத்ததுடன் பள்ளிக்கும் விடுதிக்கும் கட்டண தொகையை கேட்டுள்ளனர். பள்ளி கட்டணத்தை செலுத்திய பின்னரும் பல்வேறு காரணங்களை சொல்லி பள்ளி நிர்வாகம் மாணவர்களின் மாற்று சான்றிதழை தராமல் கடந்த இரண்டு ஆண்டுகள் அலைக்கழித்துள்ளது. பள்ளி மாற்றுச் சான்றிதழ் வேண்டி பள்ளிக்கு தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட முறை வந்து கோரிக்கை கடிதம் எழுதி கொடுத்துள்ளார். பள்ளி நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்பட்டுள்ளது. மாணவர்களின் தந்தை காலையில் மகன்களுடன் பள்ளிக்கு சென்று மாற்றுச் சான்றிதழ் கேட்டுள்ளார். மாற்றுச்சான்றிதழ் வழங்க பள்ளி நிர்வாகம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவரை மாலை நேரம் வரை காத்திருக்க வைத்த பள்ளி நிறுவனம் எந்த பதிலும் கூறாமல் காத்திருக்க செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஃபக்ருதீன் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய சிறுகனூர் போலீசார் இது பள்ளி கல்வித்துறை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இதுகுறித்து விசாரணை செய்து பள்ளி கல்வித்துறைக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது காரில் தப்பிச் சென்றுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே ஒரு தனியார் பள்ளி நிர்வாகம் அலட்சியத்தால் இரு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதால் அமைச்சர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.