டிடிவி தினகரனின் விமர்சனம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி பாராளுமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ஆண்டிப்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வருகை தந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு பெண்கள் கும்ப மரியாதை செலுத்தி மலர் தூவி வரவேற்றார்கள். அவர் கூட்டத்தில் பேசியபோது, “தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி உள்ளார். ஆனால் திமுகவின் கூட்டணி பிரதமராக யாரை அறிவித்துள்ளார்கள்? ஸ்டாலினையா? ஸ்டாலின் யார் என்று தமிழ்நாட்டை தவிர்த்து அடுத்த மாநிலத்திற்கு கூட தெரியாது. அதேபோல எடப்பாடி பழனிச்சாமியும் திமுக விற்கு உதவி செய்வதற்காக இரட்டை இலை சின்னத்தை கையில் வைத்துக் கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். திமுகவும் அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளனர் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். திமுகவை ஒழிப்பதற்காக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் கொண்டு வந்த இரட்டை இலை சின்னத்தை, எடப்பாடி பழனிச்சாமி திமுகவிற்கு உதவுவதற்காக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம் திமுகவிற்கு எடப்பாடி பழனிச்சாமி கள்ளத்தனமாக உதவி செய்து வருகிறார். திமுகவின் பி டீமாக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். இதை தமிழக மக்கள் நன்கு அறிந்து கொண்டு தான் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி ஆகியோர் தீய சக்தி திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று தான் கூறினார்கள். நமக்கு எத்தனை சீட்டு கிடைத்தது என்பது முக்கியமல்ல எண்ணம் தான் முக்கியம். ஆகவே மத்தியில் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக ஆக வேண்டும் என்பதுதான் நமது ஒரே குறி” என்று பேசினார்.