தனியார் பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசு பாராட்டு விழா!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழ்நாடு அரசு சார்பில் தனியார் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆகஸ்ட் 4ம் தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில், “2023&-2024ம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 2199 தனியார் மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளிகளும், 12ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 1750 தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளும் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும், தனியார் பள்ளிகளை சார்ந்த 78 மாணவ / மாணவியர்கள் சர்வதேச அளவிலும், 255 மாணவ / மாணவியர் தேசிய அளவிலும், 1579 மாணவ / மாணவியர் மாநில அளவிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளனர். மேற்கண்டவாறு 100% தேர்ச்சி பெற்ற பள்ளி நிர்வாகிகள், பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாராட்டி ஊக்குவிக்கவும், சர்வதேச / தேசிய / மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற மாணவ / மாணவியரை மென்மேலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு அரசு சார்பில் முதன்முறையாக 04.08.2024 அன்று சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலைமையிலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முன்னிலையிலும் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும் சர்வதேச / தேசிய / மாநில அளவில் பதக்கங்களை வென்ற மாணவ / மாணவியர்களுக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.