தருமபுரியில் தாய் சேய் அவசர சிகிச்சை மையம்: முதலமைச்சர் திறந்துவைப்பு

Filed under: தமிழகம் |

தர்மபுரி, செப் 30:
தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தாய்சேய் அவசர சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டத்திற்கு சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு, அரசு திட்டங்களுக்கான ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய கட்டிடம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து நான்கு தளங்களாக 5,060 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ள அந்த வளாகத்தை அவர் பார்வையிட்டார்.

இந்த பிரிவு ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிட வளாகத்தில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற 95 படுக்கைகள் உட்பட மொத்தம் 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 

இதையடுத்து, தருமபுரி மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 7 ஊராட்சிகளுக்கும் மற்றும் சிறப்பாக கொரோனா பணியாற்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோருக்கும் விருது மற்றும் கேடயங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு சுகாதாரத் துறையின் பரிசு பெட்டகங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.

இவ்விழாவில், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனும் பங்கேற்றார்.