திமுக விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்து!

Filed under: அரசியல்,தமிழகம் |

திமுக விசிக இடையே மக்களவைத் தேர்தலுக்காக தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அனைத்து கட்சிகளும் நெருங்கி வரும் மக்களவை தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. கொமதேக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இன்று மதிமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்களவை தேர்தலில் மூன்று தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று விசிக வலியுறுத்தி வந்தது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. விசிகவுக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஒரு பொது தொகுதி உட்பட 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தி வந்தார்.