நம்பிக்கை வாக்கெடுப்புக்காக ஆளுநருக்கு கடிதம்!

Filed under: அரசியல்,இந்தியா |

பாஜக அரசு ஹரியானாவில் ஆளும் பெரும்பான்மை இழந்துள்ளது. அம்மாநில ஆளுநருக்கு, முன்னாள் துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.

ஹரியாணாவில் ரந்தீர் கோலன், தரம்பால் கோந்தர், சோம்பீர் சிங் சங்வான் ஆகிய 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வழங்கி வந்த ஆதரவை செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்று, காங்கிரஸுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். பாஜக அரசு பெரும்பான்மை இழந்துள்ள நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அம்மாநில ஆளுநருக்கு, முன்னாள் துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா எழுதியுள்ள கடிதத்தில், “சமீபத்தில் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவினை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றதாலும், ராஜினாமா செய்ததாலும் ஆளும் அரசு பேரவையில் சிறுபான்மை அடைந்த அரசாக மாறியுள்ளது. எனவே, அரசு சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உடனடியாக ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.