நாகையில் மிதமான மழையால் நெல் மூட்டைகள் பாதிப்பு!

Filed under: தமிழகம் |

ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் இன்று டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவித்திருந்தது.

அதன்படியே இன்று நாகை மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. இந்த மிதமான மழைக்கே நாகை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதையடுத்து விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அறுவடை முடிந்த கையோடு நெல் கொள்முதல் செய்வதற்காக நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விவசாயிகள் அடுக்கி வைத்திருந்தனர். இந்நிலையில் நாகை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அறுவடைக்கு நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்ததோடு அறுவடை பணியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விவசாயிகள் தங்கள் சொந்த காசில் தார்பாய்கள் வாங்கி நெல் மூட்டைகளை மூடும் பணிகள் இருப்பதாக கூறப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 172 நேரடி கொள்முதல் நிலையங்களில் சுமார் 75 நிலையங்கள் திறந்த வெளியில் செயல்படுவதால் நெல் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு கட்டிடம் கட்டி தர வேண்டும் என விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.