நிதிஷ்குமார் பேச்சு குறித்து பாஜக கேள்வி!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், நேற்றைய இந்தியா கூட்டணியில் “ஹிந்தி ஒரு தேசிய மொழி, அதை திமுகவினர் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக நிதிஷ்குமார் பேச்சுக்கு அமைதியாக இருந்தது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. பாஜகவின் முக்கிய பிரமுகருமான நாராயணன் திருப்பதி இது குறித்து கூறும்போது, “ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி என்கிறார் INDI கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான நிதிஷ் குமார். ஹிந்தியை தூக்கிப்பிடித்தும், மற்ற மொழிகளை அவமானப்படுத்தியும் அந்த கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறது தி.மு.க. தமிழுக்காக, தமிழர்களுக்காக, தமிழ் மொழிக்காக இருப்பதாக மார்தட்டி கொள்ளும் திமுக, கூட்டணி கூட்டத்தில் ஹிந்தி தேசிய மொழி என்றும் மற்ற மாநிலத்தவர்களை அவதூறு செய்தும் அமைதி காத்தது என்? தமிழை விட ஹிந்தி உயர்ந்தது என்றெண்ணி ஹிந்திக்கு அடிமையாகி விட்டதா திமுக? கூட்டணிக்காக தமிழ் மொழியை அடகு வைக்க துணிந்து விட்டதா தி.மு.க? உண்மையிலேயே தமிழுக்காக எதையும் செய்ய தயாராயிருக்குமானால், இந்நேரம் INDI கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கும் அல்லது நிதிஷ் குமார் கட்சியை INDI கூட்டணியை விட்டு வெளியேற்ற முனைந்திருக்கும். ஆனால், ஹிந்திக்கு குடை பிடித்து, சாமரம் வீசி, தமிழை புறந்தள்ளும் தி.மு.க.விற்கு இனியும் தமிழ் குறித்து பேசும் தகுதி இல்லை” என்று கூறியுள்ளார்.