பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வார்னிங்!

Filed under: அரசியல்,தமிழகம் |

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டத்தை விட கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், மாநில பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ், “கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் தொல்லை விவகாரத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்ந்து காவல்துறையிடம் அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மீண்டும் நடக்காத வகையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்திலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 800 மருத்துவர்கள் ஒன்றியம் வாரியாக கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் கவுன்சிலராக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. பெண் குழந்தைகளை பெற்றவர்கள் தைரியமாக குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலையில் இருக்க வேண்டும். போக்சோ சட்டம் இருந்தாலும், மனநிலையில் மாற்றம் இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. பள்ளி நிர்வாகம் நடைபெறக்கூடிய தவறுகளை மூடி மறைக்காதீர்கள். தனியார், அரசு என அனைத்து பள்ளிகளிலும் எந்த தவறு நடந்தாலும் பள்ளி மேலாண்மைக்குழு அல்லது பெற்றோர் ஆசிரியர் கழக அமைப்புக்கு தகவல் கொண்டு சென்று தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டத்தைவிட கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.