பாரதி குறும்படம்!

Filed under: சினிமா |

பாரதி குறும்படம் இளம் தலைமுறையினர் கவிஞர் பாரதியார் குறித்து அறிந்து கொள்ளும் விதமாக வெளியிடப்பட்டது.

கோவையில் பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது வாழ்வியல்கள் மற்றும் தமிழ் கவிதைகள் குறித்து இன்றைய இளம் தலைமுறை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளும் விதமாக, ‘பாரதி’ எனும் பெயரில் குறும்படம் வெளியிடப்பட்டது. அரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த குறும்படத்தை அவிநாசி அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் போ.மணிவண்ணன் எழுதி, நடித்து, இயக்கியுள்ளார். பாரதி குறும்பட வெளியிட்ட விழா கோவை ஒசூர் சாலையிலுள்ள ஆருத்ரா அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், பாரதி குறும்படத்தைக் கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் முனைவர் கலைச்செல்வி வெளியிட, அவிநாசி அரசு கலைக் கல்லூரி முதல்வர் நளதம் பெற்றுக் கொண்டார். இது குறித்து பாரதி குறும்படத்தை இயக்கி நடித்துள்ள மணிவண்ணன் கூறுகையில், “பல ஆண்டுகளாக வகுப்பறைகளில் தமிழ் பாடங்களை எடுத்து வரும் நிலையில் தற்போது கேமரா போன்ற நவீன தொழில் நுட்பங்களின் அழுத்தம் மற்றும் தாக்கத்தை உணர முடிகிறது. தமிழர்களின் பெரிய அடையாளமாக உள்ள பாரதியின் பிறந்த நாளில் மாணவர்களிடையே மொழி, மற்றும் தேச பக்தியை உருவாக்க இந்த குறும்படத்தை உருவாக்கி உள்ளேன். குறிப்பாக, இந்த குறும்படத்தின் தொழில்நுட்பப் பணிகளை மாணவர்களே செய்துள்ளனர்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்நகழ்ச்சியில் கே.ஜி.ஐ.எஸ்.எல்.காட்சி தொடர்பியல் துறை தலைவர் சார்லஸ், மற்றும் பிற கல்லூரிகளை சேர்ந்த துறை தலைவர்கள் ஜெயபிரகாஷ், ஜோன் ஆண்டனி ராஜா, பசுமை போராளி யோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்குறும்படம் குறித்து திறனாய்வு செய்ய காட்சி ஊடகத் துறைப் பேராசிரியர்களுடன், இலக்கிய ஆர்வலர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.