மக்களின் பரிதாப நிலைக்கு திமுக வழிவகுத்துள்ளது; ஓ.பன்னீர்செல்வம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

திமுக அரசு பால்விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடிய பரிதாப நிலைக்கு வழி வகுத்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆவினின் ப்ரீமியம் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்துவதாக ஆவின் அறிவித்துள்ளது. இதனால் ஆவின் ஆரஞ்சு நிற ப்ரீமியம் கொழுப்புசத்து நிறைந்த பால் பாக்கெட் ஒரு லிட்டரின் விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.46க்கு விலை மாற்றமின்றி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அட்டைதாரர்களாக இல்லாத மற்ற வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியான அறிவிப்புதான். இதுகுறித்து, ஓபிஎஸ் அறிக்கையில்,

“ஒரு லிட்டர் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலைஅட்டைதாரர்களுக்கு 46 ரூபாய்க்கும், சில்லறை விலையில் வாங்குபவர்களுக்கு 48 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை இன்று முதல் ஒரு லிட்டர் 60 ரூபாய் என ஆவின் நிறுவனம் உயர்த்தியிருப்பதாக அறிவித்துள்ளது. ஒரு லிட்டர் பால் விலை 12 ரூபாய் அளவுக்கு, அதாவது 25 விழுக்காடு அளவுக் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தித் தர வேண்டுமென்று விவசாயிகளும், பால்விற்பனையாளர்களும் கோரிக்கை விடுத்த நிலையில், லிட்டருக்கு மூன்று ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தத்தில், பொதுமக்களும், பால்உற்பத்தியாளர்களும் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். சாதாரண பாக்கெட் பாலினை விட ஆரஞ்ச் பாக்கெட் பாலில் நிறைய பேர் டீ, காபி சாப்பிடலாம் என்ற அடிப்படையில் ஏழை, எளிய மக்களும், சாதாரண டீ கடை வைத்திருப்போரும் ஆரஞ்ச் பால் பாக்கெட்டினை வாங்குகின்றார்கள் இந்தப் பாலின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியிருப்பதன் மூலம்டீ மற்றும் காபி விலைகள் மீண்டும் உயரக்கூடிய அபாய நிலையும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடிய பரிதாப நிலையும் உருவாக தி.மு.க. அரசு வழி வகுத்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.