மக்கள் நீதி மய்யம் கட்சியின் பாராட்டு!

Filed under: அரசியல் |

திமுக அரசை குறை கூறியும், புதுச்சேரி அரசை பாராட்டியும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

 

புதுச்சேரி மாநில பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அதேபோல் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி, “குடும்ப தலைவிகளுக்கு நிதியுதவி திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அளித்த திமுக, இன்னமும் பிடிகொடுக்காமல் உள்ளது ஏற்புடையதல்ல. இந்த திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அளித்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திமுக, இன்னமும் இதனை நிறைவேற்றாமல் உள்ளது. ஏற்புடையதல்ல. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதோடு இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஊதியம் என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென நாட்டிலேயே முதன்முதலில் குரல் கொடுத்தவர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன். இந்த திட்டத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்பதுடன், புதுச்சேரி அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது” என்று பதிவிட்டுள்ளது.