வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதிக்கு இன்னும் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவிக்காமல் இருப்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மட்டுமின்றி திமுகவுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
புதுவையை சேர்த்து 10 தொகுதிகள் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதுவரை 9 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாததால் அப்பகுதியில் உள்ள காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியை தொண்டர்கள் யாருக்கு வேலை செய்வது என்று தெரியாமல் உள்ளனர். மேலும் கடந்த 20ம் தேதியிலிருந்து வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. நாளை தான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்ற நிலையில் இன்னும் வேட்பாளர் கூட அறிவிக்காமல் இருப்பது திமுகவுக்கே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுக தலைமை காங்கிரஸ் கட்சியிடம் கேள்வி எழுப்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை மயிலாடுதுறை தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் என்றும் நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும் கூறப்படுகிறது.