மர்மமான முறையில் கூலி தொழிலாளி பலி!

Filed under: தமிழகம் |

மது போதை நோய் மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் கூலித் தொழிலாளி சிகிச்சை பெற்றுவந்தார். அவர் தற்போது மர்மமான முறையில் இறந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்‌ எம்.எஸ்.பி.நகரில் ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தியம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திகேயன் (28). இவர் அப்பகுதியில் வெற்றி லைப் கேர் பவுண்டேஷன் என்ற பெயரில் கடந்த 6-மாதங்களுக்கு முன்பு குடிபோதை மறுவாழ்வு மையத்தை தொடங்கினார். இந்த மையத்தில் மனநல பாதித்தவர்கள் மற்றும் குடிபோதைக்கு அடிமையானவர்கள் என 33- பேர்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். களிமேடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மணிகண்டன் (39) குடி போதைக்கு அடிமையாகி உள்ளார். மணிகண்டனை காப்பாற்றுவதற்காக அவருடைய மனைவி சத்தியவாணி தாராபுரம் எம்.எஸ்.பி நகரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதித்து சென்றார். மணிகண்டன் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அவருடைய மனைவி சத்தியவாணி தனது கணவர் மர்மமான முறையில் இறந்துள்ளதாக தாராபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் விசாரணை மேற்கொண்டனர். தாராபுரம் கோட்டாட்சியர் செந்திலரசன், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சந்திரசேகர், தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தராஜ் தேசிய திட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் அருண் பாபு, குடிமையியல் மருத்துவர் தாராபுரம் தலைமை மருத்துவர் உமா மகேஸ்வரி, உடுமலை சரக மருத்துவ ஆய்வாளர் உமா மகேஸ்வரி, அலுவலக கண்காணிப்பாளர் இணை இயக்குனர் அலுவலகம் திருப்பூர் ஹரி கோபாலகிருஷ்ணன், ஆகியோர் கொண்ட குழுவினர் மறுவாழ்வு மையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது உரிய அனுமதியின்றி மறுவாழ்வு மையம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அங்கு சிகிச்சையில் இருந்த 33 பேரை திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 -ஆம்புலன்ஸ் மூலம் அனைவரையும் மாற்றம் செய்தனர். இதனை தொடர்ந்து 4-மணி நேரம் விசாரணைக்கு பின் மறுவாழ்வு மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இச்சம்பவம் குறித்து மறுவாழ்வு மைய உரிமையாளரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.