மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை; தேமுதிக திட்டவட்டம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

தேமுதிக வாய்ப்பு கிடைத்தால் திமுகவோ, அதிமுகவோ யாருடனாவது கூட்டணி வைப்போம் என்று தெரிவித்துள்ளது.

விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாகி உள்ளது. திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்தேர்தலில் தனித்தனியே களம் காணும், அதிமுகவும், பாஜகவும், பாமக, தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக எந்த பக்கம் செல்லும் என்பது இதுவரைக்கும் புரியாத புதிராக உள்ளது. மக்களவைத் தொகுதிகளுடன், ராஜ்யசபா சீட் ஒன்று வழங்க வேண்டும் என்று தேமுதிக நிபந்தனை விதித்துள்ளது. அதற்கு பாஜகவும், அதிமுகவும் இதுவரைக்கும் செவி சாய்க்கவில்லை என சொல்லப்படுகிறது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவலுக்கு தேமுதிக தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி, “அதிமுக, பாஜக உள்ளிட்ட எந்த கட்சியுடன், கூட்டணி தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. திமுகவுடன் கூட்டணி வைக்க மாவட்ட செயலாளர்கள் ஏற்கனவே வலியுறுத்தினர். வாய்ப்பு கிடைத்தால் திமுகவோ, அதிமுகவோ யாருடனாவது கூட்டணி வைப்போம்” என்று விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் பாஜக கூட்டணிக்கு செல்ல தேமுதிக தயாராக இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அரசியல் வட்டாரத்தில் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.