முதலமைச்சர் செய்தியாளரின் மறைவுக்கு நிதியுதவி!

Filed under: அரசியல்,தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் முத்துக்குமார் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சரின் அறிக்கையில், “திருநெல்வேலியில் 30 ஆண்டுகளாக பல்வேறு ஊடக நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி, தற்போது பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்டசெய்தியாளராகப் பணியாற்றி வந்த திரு. முத்துக்குமார் அவர்கள் நேற்றிரவுகங்கைகொண்டான் பகுதியில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தாழையூத்து அருகே நாய் ஒன்று குறுக்கே வந்ததால், அவர் நிலை தடுமாறி, சாலையில் விழுந்து, படுகாயமடைந்து, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் என்ற துயர செய்தியினை அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன். சாலை விபத்தில் உயிரிழந்த திரு. முத்துக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 இலட்சம் ரூபாய் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.