முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை!

Filed under: அரசியல் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவி சத்யாவுக்கு நடந்த துயரத்தை அறிந்து நொறுங்கி போனேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

சென்னையில் கல்லூரி மாணவி சத்யா என்பவரை ஒரு தலையாக காதலித்து வந்த சதீஷ் என்ற இளைஞர், சத்யா தனது காதலுக்கு ஒப்புக்கொள்ளததால் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி சத்யா உயிரிழந்ததை தாங்க முடியாமல் அவரது தந்தையும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சதீஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கலும், வேதனையும் தெரிவித்துள்ளார். “சென்னையில் மாணவி சத்யாவுக்கு நிகழ்ந்த துயரத்தை அறிந்து நொறுங்கி போயுள்ளேன். இதுவல்ல நாம் காண விரும்பும் சம்பவம். தமிழகத்தில் இனி எந்த பெண்ணுக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை ஒரு சமூகமாக நமக்கு உள்ளது. இயற்கையிலேயே ஆண்கள் வலிமை உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் அந்த வலிமை பெண்களை பாதுகாக்கக்கூடியதாக இருக்க வேண்டுமே தவிர அடுத்தவர்களை கட்டுப்படுத்துவதற்காக இருக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.