முத்தூஸ் மருத்துவமனையில் வருமானவரித்துறை ரெய்டு?

Filed under: தமிழகம் |

திடீரென்று வருமான வரித்துறையினர் கோவை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனைக்குச் சொந்தமான மூன்று இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

கோவையில் சரவணம்பட்டி, சிங்காநல்லூர் மற்றும் மதுக்கரை பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை மற்றும் அவர்கள் நடத்தி வரும் ஒரு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். புதன்கிழமை காலை 11 மணியளவில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மருத்துவமனை என்பதால் அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கும் சிகிச்சை பெற வருபவர்களுக்கும் சிரமம் ஏற்படக்கூடாது என்பதால் கதவுகளை பூட்டாமல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிங்காநல்லூர் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்து சரவணன் குமாரின் அறை மற்றும் அலுவலக அறைகளை தீவிர சோதனை செய்தனர். பின் அக்கவுண்ட்ஸ் பிரிவில் அமர்ந்து அவர்கள் கணக்கு வழக்குகளை சரி பார்க்க துவங்கினர். அதே சமயத்தில் மற்றொரு குழுவினர் டாக்டர் முத்து சரவணக்குமாரை மதுக்கரை பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். கடந்த இரண்டு வருடங்களாக பூட்டிய நிலையில் இருக்கும் இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள அறைகளில் தீவிர சோதனை நடத்தினர். மற்றொரு குழுவினர் சரவணம்பட்டியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சோதனை நடத்தினர். நள்ளிரவையும் தாண்டி சோதனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது .அதேபோல டாக்டர் முத்து சரவணக்குமாரின் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மறுநாள் வியாழக்கிழமை அதிகாலை 5 மணி வரை தீவிர சோதனை நடைபெற்றது. சோதனைக்கு பின் அதிகாரிகள் சுமார் 20 கோடி ரூபாய் அளவில் ரொக்கமாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.