முன்னாள் எம்.பி. செல்வேந்திரனின் உறுதி!

Filed under: அரசியல்,தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு முன்னாள் எம்.பி. கம்பம் செல்வேந்திரன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கம்பம் செல்வேந்திரன் பேசும்போது, “உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு தலைவரின் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர் என்றால் அதற்கு காரணம் தான் பிறந்த தமிழ்நாட்டை தனது உழைப்பால் உயர்த்தி காட்டி திராவிட மாடல் என்ற ஆட்சியை ஆசிய கண்டம் முழுவதும் பேசும் அளவு செய்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனால் அவரது பிறந்த நாளை கொண்டாடுகிறோம். தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் வீட்டிற்குள் நுழைவதை போல கொரோனா தொற்று காலத்தில் ஆட்சிக்கு வந்தோம், கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார். ஒரு பெண் இலவச பேருந்துகளில் பயணம் செய்வதன் மூலம், 888 ரூபாய் ஒவ்வொரு பெண்ணிற்கும் மீதமாகிறது என, ஆய்வறிக்கை கூறுகிறது. ஆகவே, மாதம் ரூபாய் ஆயிரம் கொடுப்பது போல பெண்களுக்கு மாதம் 888 ரூபாய்யும் வழங்கி வருகிறோம். நாடாளுமன்ற தேர்தல் வந்துவிட்டது, இக்கூட்டம் பிறந்தநாள் கூட்டம் மட்டுமல்ல தேர்தலுக்கான கூட்டமாக நடைபெற்று வருகிறது. 96 கோடியே 86 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட போகிறார்கள் ஜனநாயக நாட்டில் இத்தனை பேர் வாக்களிக்கும் ஒரு தேர்தல் திருவிழா இன்னும் ஒரு வார காலத்திற்குள் அறிவிக்க உள்ளனர். அதிமுக உடைந்த கண்ணாடி அந்த கண்ணாடியில் யாரும் முகம் பார்க்க மாட்டார்கள். அதிமுகவினர் தகுதியோடு வளர வில்லை சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக கோட்டைக்கு வந்துவிட்டனர். அதனால் அவர்கள் வெற்றி பெற முடியாது. கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் இந்தியாவின் பெருமுதலாளிகள் பெருமுதலாளிகளின் காவலராக பிரதமர் மோடி உள்ளார். 10 கோடிக்கும் மேல் கடனை திருப்பி செலுத்தாமல் ஓடி போனவர்களில் 28 பேரில் 27 பேர் குஜராத்-யைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கர்நாடகவைச் சேர்ந்த மல்லையா, ஒருவர் கூட தமிழர் இல்லை. வரும் தேர்தல் தமிழன் யார் என்பதை உணர்த்த வேண்டிய தேர்தல், நமக்கு வேண்டிய உரிமைகளை தர மறுக்கும் பாஜக-வை வீழ்த்த வேண்டிய தேர்தல், தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிட்டாலும் அத்துனை தொகுதிகளிலும் பாஜக டெப்பாசிட் இழக்கும் வடக்கில் வேண்டுமானால் கால் உன்றலாம், தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது” என்று பேசினார்.