மூளை சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்!

Filed under: தமிழகம் |

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தளுகை பாதர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷின் மனைவி ராணி (50). கணவன் மனைவி இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் தங்களது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

இதில் எதிர்பாராத விதமாக திருப்பத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் ராணி பலத்த காயமடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திடீரென நேற்று ராணி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மூளைச்சாவடைந்தவரின் உடல் உறுப்புகளான கல்லீரல் இரண்டு கண் விழிகள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகளை தானமாக பெறப்பட்டது. மேலும் உடல் உறுப்புகள் வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின் படி கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நபருக்கும், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. மூளைச்சாவடைந்தவரின் இரண்டு கண் விழிகள் திருச்சி அரசு மருத்துவமனையில் இரண்டு பயனாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது உடலுக்கு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மரியாதை செலுத்தி உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடல் உறுப்புகள் தானம் செய்த ராணியின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் விதமாக துறையூர் வட்டாட்சியர் வனஜா மற்றும் உப்பிலியபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் நேரில் சென்று அரசு மரியாதை செலுத்தினார். கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்த செய்தி அறிந்து தளுகை பாதர் பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏரளான பொதுமக்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியான இந்நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.