லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வழியாக கோடிக்கணக்கில் வழங்கிய நிறுவனங்களில் அதிகளவில் நிதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கும் முறையை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தடை செய்ததுடன், இதுவரை தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்த விவரங்களை சமர்பிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வகையில் எஸ்பிஐ அளித்த விவரங்கள் தேர்தல் ஆணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அதிகளவில் தேர்தல் நன்கொடை பெற்ற கட்சிகளில் பாஜக முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ், அகில இந்திய, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. இதில் ஏராளமான நிறுவனங்கள் பல கோடிகளை தேர்தல் பத்திரங்கள் வழியாக அளித்துள்ளன. அதில் முதல் இடத்தில் Future Gaming and Hotel Services உள்ளது. இந்நிறுவனம் மொத்தமாக ரூ.1,368 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலமாக வழங்கியுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் பண மோசடி வழக்கில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனமாகும். ஆனால் இத்தனை கோடி ரூபாய்களையும் அவர் ஒரே கட்சிக்கு அளித்தாரா? வெவ்வேறு கட்சிகளுக்கு வழங்கினாரா? என்பது குறித்து தெரியவில்லை. மேலும் இதுபோல Mega Engineering and Infrastructure Limited, Quick Supply chain Privat Ltd உள்ளிட்ட பல நிறுவனங்கள் பல கோடிகளை தேர்தல் பத்திரம் மூலமகா வழங்கியது தெரிய வந்துள்ளது.