ரேசன் பொருட்களை பெற வீடுகளுக்கு வரும் டோக்கன் – தமிழக அரசு!

Filed under: தமிழகம் |

சென்னை, ஏப்ரல்22

கொரோனாநோய்த் தொற்றினை தடுக்க நாட்டிலேயே முதன்முதலாக, மாண்புமிகு அம்மாவின் அரசு மாநிலம் முழுவதற்குமான முழு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது. ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க ஊரடங்கு உத்தரவு காலம் ஆரம்பிக்கும் முன்னரே, 3,280 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க ஆணையிட்டது.

அதில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் விலையின்றி வழங்க உத்தரவிடப்பட்டது. இன்று வரை 1,89,01,068 குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல,  15.4.2020 அன்று முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதற்கு முன்பே, 13.4.2020 அன்று தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மேமாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோதுவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசிஆகியவை நியாய விலைக் கடைகளில், விலையின்றி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்கள்.

நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், வருகின்ற 24.4.2020 மற்றும் 25.4.2020 ஆகிய நாட்களில் குடும்ப அட்டை தாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் (TOKEN) வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலை கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறையை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், சமூக இடைவெளியை கடைபிடித்து, தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.