நடிகர் விஜய் எங்களுக்கு அண்ணன்: தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி.

Filed under: தமிழகம் |

நடிகர் விஜய் எங்களுக்கு அண்ணன்: தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி.

 

திருச்சி தேசிய கல்லூரியில் வருகின்ற 7-ந் தேதி தொடங்கி 11 -ந் தேதி வரை நடைபெற உள்ள 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஐ.சி.ஆர்.எஸ் எனப்படும் பன்னாட்டு கருத்தரங்கம் நடக்கிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,
பன்னாட்டு கருத்தரங்கில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிறந்த விளையாட்டு வல்லுனர்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து உடற்கல்வியியல் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பங்கேற்கின்றனர்.
அதில் என்னுடைய முனைவர் பட்டம் தொடர்பான ஆய்வு கட்டுரையும் சமர்ப்பிக்க உள்ளேன். மேலும் தமிழகத்தில் சிறந்து விளங்கக்கூடிய விளையாட்டு வீரர்களையும் சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட் போன்று இந்த கருத்தரங்கம் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்று சிறப்பிக்கும் ஒன்றாக இருக்கும். இதனை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கூறியதாவது, நடிகர் விஜய்யை பொறுத்தவரைக்கும்,  உதயநிதி ஸ்டாலின் மூலம் எங்களுக்கும் கிடைத்த அருமையான அண்ணன்.நேரடியாக பேசும் போதும் அன்பாக பேசக்கூடியவர் தான். உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது போல நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சி துவங்குவது என்பது அவரவர்களுடைய விருப்பம்.
கட்சியின் பெயர் வைப்பது என்பது அவர் அவர்களுடைய எண்ணம். அவர்களுடைய கொள்கை என்னவென்று தெரிய வரும் போது, அவர்களது நோக்கம் என்னவென்று தெரியவரும் .
தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். இவருக்கு சீட்டு கொடு, அவருக்கு சீட்டு கொடு, இந்த கூட்டணிக்கு சீட்டு கொடு என்று யாரும் சொல்லக்கூடாது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளரை, அனைவருக்கும் பிடித்த வேட்பாளரை நிறுத்துவோம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நிற்பது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்று எண்ணி செயலாற்ற வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு பட்டியலில் சேர்ப்பதற்கு ஆலோசனை செய்து வருகிறோம். அதன்பிறகே மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய முடியும்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.