வயிறு எரிகிறது; 2 நாள்களாகச் சாப்பிடவில்லை!’ – கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து ஆர்.பி.உதயகுமார்

Filed under: தமிழகம் |

வயிறு எரிகிறது; 2 நாள்களாகச் சாப்பிடவில்லை!’ – கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து ஆர்.பி.உதயகுமார்.

வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கான ஆலோசனைகளை வழங்க தேனி வந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “தேனி தொகுதியில் திமுக வேட்பாளரை விட, பாஜக கூட்டணி வேட்பாளரை விட, அதிமுக வேட்பாளர் அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்றும் 9 லட்சம் வாக்காளர்களை சந்தித்திருக்கிறார். தற்போது வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பெயரில் பல்வேறு விவாதங்கள் நடக்கிறது. அதில் கருத்து திணிப்பு நடத்தி எங்கள் தொண்டா்களை சோர்வடைய செய்யும் வேலையை செய்கிறார்கள். ஆனால் எங்களின் வாக்கு முகவர்கள் ராணுவ வீரர்களைபோல பயிற்சியளிக்கப்பட்டு சுறுசுறுப்பாக பணியாற்றஇருக்கிறார்கள்

கடந்த தேர்தலில் பொய் பிரசாரத்தால் குறைவான வாக்கு எண்ணிக்கையில் திமுக ஆட்சியை பிடித்தது. அதிமுக-வுக்கு நிரந்தர வாக்கு வங்கி இருக்கிறது. அவர்கள் மாற்றி வாக்களிக்க மாட்டார்கள். இருப்பினும் ஆளுங்கட்சி ஏதேனும் தில்லுமுல்லு செய்வார்களோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. 40-க்கு 25 இடங்களில் வெற்றி பெறுவோம், குறிப்பாக தேனி தொகுதியில் வெல்வோம். எந்த சூழ்ச்சியும் சூதும் எடுபடாது.

வாக்குப்பதிவு செய்துவிட்டு வந்தவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியதாக கூறுகிறீர்கள். ரகசிய வாக்கெடுப்பு எனக் கூறும் போது எப்படி அவர்கள் கூறுவதை உண்மையென எடுத்துக் கொள்ள முடியும். 15 லட்சம் வாக்காளர்கள் உள்ள தொகுதியில் 3 லட்சம் வாக்காளர்களிடம் கேட்டிருக்க வேண்டும், ஒரு சிலரிடம் கருத்து கேட்டுவிட்டு முடிவை கணிக்கிறார்கள். ஆன்-லைனில் கருத்துக்கணிப்பை நடத்தினோம் என்கிறார்கள். தொகுதியில் 15 சதவிகித – 30 சதவிகித வாக்காளர்களை சந்தித்தால்கூட பரவாயில்லை.

இவ்வாறு கருத்துக்கணிப்பு வெளியிடுவதன் மூலம் பலருக்கும் பேர் மனஉளைச்சல் ஏற்படும். வாக்களித்த மக்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கட்சியினருக்கும் அச்சத்தை ஏற்படுத்திகிறது. சமூக வலைதளங்களிலும் தவறான கருத்துகளை வெளியிடுகின்றனர். எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு வெளியாவதை பார்த்து வயிறு எரிகிறது… 2 நாள்களாக சாப்பிடவில்லை. மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கிறது” என்றார்.